Thursday, 22 December 2011

ஒஸ்தி




இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘DABANGG’ படத்தின் ரீமேக்.



சிம்பு படம் முழுக்க நாடகம் போல் பேசிக்கொண்டே இருக்கிறார். அவர் கதையில் போலீஸா? ரௌடியா? ஒரே குழப்பம்.
ஒன்றுகொன்று கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத காட்சிகள். போலீஸ் உடையே போடாமல் எப்போதும் போலீஸ் வேலை பார்ப்பது என்பதையும் நம்பமுடியவில்லை. மனம் நொந்துகொண்டே  நாம் படம் பார்க்கும் போது சந்தானம் வரும் காட்சிகள் மட்டும் சிரிக்க முடிகிறது.



நாயகி ரிச்சா. வருகிறார், பார்க்கிறார், சிரிக்கிறார் அவ்வளவுதான். ஏற்கெனவே ஆடியோவில் கேட்டு ரசித்த பாடல்களை திரைப்படத்தில் பார்க்கும் போது ரசிக்கும் படியாய் இல்லை. 



சண்டைக்காட்சிகள் இழுவை ரகம். நம்ப முடியாத திரைக்கதை. படம் ஆரம்பத்திலிருந்து இரண்டு மணி நேரமும் நாடகம் பார்ப்தை போன்று கதாபாத்திரங்கள் வந்து வந்து செல்கிறது. சுவாரஸ்யம் சுத்தமாக இல்லை. படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியாக எதுவும் இல்லை.பாடல் ஆடியோவில் மட்டும் ஒகே.
தில், தூள், கில்லி படங்களை இயக்கிய தரணிதான் இந்தப்படத்தின் இயக்குநரா என்று கேட்குமளவுக்கு அமெச்சூர்த்தனம்.

T.R பாணியில் சொல்வதென்றால் படம் பெயரோ ஒஸ்தி.
பார்த்தவர்கள் நம் நிலைமையோ நாஸ்தி.

எச்சரிக்கை
பார்த்து அவஸ்தைபடுவதைவிட, கேட்டு(ஆடியோ) நிம்மதியாக இருக்கலாம்.

Thursday, 1 December 2011

போராளி

இயக்குநர் சசிகுமார் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம்.





தலைப்பை பார்த்துவிட்டு எதிர்பார்ப்புடன் சென்றால் நாம் தியேட்டரை விட்டு வெளியே வரும் போது நமக்கு ஏற்படுவது பெருத்த ஏமாற்றம்தான்.

முதல்பாதியில் விக்ரமன் காலத்து திரைப்படக்காட்சிகள்,செயற்கையாக தெரிந்தாலும் கொஞ்சம் சுவாரஸ்யமாக நகைச்சுவையுடன் செல்கிறது. சென்னையில் நண்பர்கள் தங்குவது, வேலைக்கு செல்வது, பக்கத்து வீட்டு பெண்ணை பார்த்து ஏங்குவது, பக்கத்து வீட்டு கணவன் மனைவிக்கிடையில் ஏற்படும் சண்டை,நண்பர்களுக்குள் ஏற்படும் பிரச்னை போன்ற காட்சிகளில் வேகமாகச் செல்லும் திரைக்கதை இடைவேளைக்குப் பின் உள்ள பிளாஷ் பேக் கதையுடன் உடைந்து விடுகிறது.

இரண்டாவது பாதியில் கதையில் உப்புச்சப்பில்லாத கதாபாத்திரங்கள் (செயற்கையாக) காகிதப்பூ போல் காட்சியளிக்கின்றன. முதல் பாதிக்கும் இரண்டாவது பாதிக்கும் சம்பந்தம் (லாஜிக்) எதுவும் இல்லை.

சித்தி கொடுமை, சித்தியின் உறவினர்கள்   நாயகனிடம் கொண்ட கடுமை போன்ற பழைய சமாச்சாரங்கள் தாங்க முடியலை. பாடல்கள், இசை ரொம்ப ரொம்ப சுமார். மனநல மருத்துவமனையில் நடக்கும் கோரக்காட்சிகள் ஐயோ! ஹீரோ சசிக்குமார் நடிப்பதற்கு முயற்சி செய்திருக்கிறார். கஞ்சா கருப்புவின் காமெடியும் எங்கேயோ பார்த்த ரகம். ஹீரோயின் பாவம் யாருடைய மனசிலும் ஒட்டவே இல்லை...ஹீரோ உட்பட.

எச்சரிக்கை
படத்தலைப்பில் போராளி  
இடையில் கோமாளி
படம் முடிந்து வெளியே வரும் போது நம்நிலை நோயாளி”.

Tuesday, 29 November 2011

மயக்கம் என்ன

செல்வராகவன் இயக்கி தனுஷ் நடிப்பில் வெளிவரும் நான்காவது படம்.



இயக்குநர் செல்வராகவனுக்கு குரூர சிந்தனைகள் மீது திடீர் மயக்கம். ஒரு கதையை அதனுடைய போக்கில் சொல்லாமல் சம்பந்தமில்லாத காட்சிகளை கோர்த்து வேறு தளத்திற்கு இட்டுச்சென்று அங்கிருந்து நல் பாதையில் காட்டும் முயற்சிகளில்தான முழுமயக்கம். முதல் பாதி காதல் கதை. பெரிய்ய... கதை. திருப்பங்களின்றி மெதுவாக நகர்கிறது.

நண்பனின் காதலியை தன் காதலியாக கதாநாயகன் மாற்றிக்கொள்ளும் கதை. “காதல் கொண்டேன்“ படத்தில் கதாநாயகன் செய்தது போன்று இந்தப்படத்தில் கதாநாயகி செய்வது ஏக்கமுள்ள ஆனால் வக்கிரம் நிறைந்த கதாப்பாத்திரம். கதாநாயகி முதல் பாதியில் நடிக்காமல் கலர்கலராய் வந்து செல்கிறார்.

இரண்டாவது பாதியில் வசனங்களே பேசாமல் எதற்கெடுத்தாலும் முறைத்துப்பார்க்கிறார். கதாநாயகனின் நண்பனாக நடிக்கும் சுந்தர் யதார்த்தமாய் நடித்தாலும் காமெடி நடிகருக்கான தன்மை கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது.

இரண்டாவது பாதியில் தனுஷ் ரிச்சா திருமணத்திற்கு பிறகு நடப்பவைகள் ரொம்பவும் டெம்ப்ளேட் காட்சிகள். பொறுமையை சோதிப்பவை. திரைக்கதை சுவராஸ்யங்கள் எதுவும் இல்லாத உப்பு சப்பில்லாத காட்சிகள். கதாநாயகன் தன்னுடைய இலட்சியத்தை அடிக்க நினைத்து வேதனைப்படுவது பின்பு குடித்துவிட்டு உளறுவது, தகராறு செய்வது, மனைவியை அடிப்பது என்று தொடர்ந்து சம்பந்தமில்லாத காட்சிகள். முடிவில் உலகளவில் நடக்கும் புகைப்படப் போட்டியில் பரிசு பெறுவது, வில்லனை வெற்றி கொள்வது அதற்காக ரிச்சா உழைப்பது(குமுதம்) இதெல்லாம் இராமாயண காலத்துப் பழசுகள். இயக்குநர் செல்வராகவனின் சிந்தனைகளில் ஏற்பட்ட அமெச்சூர் காட்சிகள்.

படத்தில் தனுஷ், ரிச்சா, சுந்தர் யாருக்குமே கேரக்டரைசேஷன் சுத்தமாக இல்லை. யார் மீதும் காதலோ அன்போ கதாபாத்திரங்கள் மீது எந்த உணர்வும் ஏற்படவில்லை. மாறாக கோபந்தான் வருகிறது.

ஆனாலும் தனுஷ் நடிப்பில் நவரசம். ஜி.வி.பிரகாஷ்குமார் பிண்ணனி இசையில் உயிர்ப்பு. பாடல்களும் ஓ.கே. ராம்ஜியின் கேமராவில் தாலாட்டு. செல்வராகவனின் இயக்கம் மட்டும் குழப்பத்தில் மயக்கம்.


சம்பவங்களை கதையில் சொல்வதை விட்டுவிட்டு பல்கதைகளையே சம்பவங்களாக மாற்றியிருப்பது இயக்குநர் இன்னும் மயக்கத்திலிருந்து தெளியவில்லை என்றுதான் நிரூபிக்கிறது. இயக்குநர் செல்வராகவனிடம் ஒரு நிமிஷம் சார் இலக்கில்லாத பயணம் ஊர் போய்ச்சேராது.

எச்சரிக்கை
பார்க்கலாம் (மயக்கத்தில்...)